கோவை, ஜனவரி 2
எளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என கோவை மாவட்ட பாஸ்போர்ட் அதிகாரி ஜி. சிவக்குமார் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தின் பாஸ்போர்ட் அதிகாரியாக ஜி. சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படும் என்ற தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவை பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படாது. மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகம், கோழிக்கோடு பிராந்தியத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாகவே, கோவை பாஸ்போர்ட் அலுவலகமும், சென்னை பிராந்தியத்துடன் இணைக்கப்படும் என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
தற்போது, மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விரைவில், அந்த அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலீஸாரால் நடக்கும் காகித முறையில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகள் எதிர்காலத்தில் டிஜிட்டல்மயமாக்கப்படும். இதற்காக, போலீஸாருக்கு பாஸ்போர்ட் ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்ட டேப் (Tab) வழங்கப்படும். அதில், ஆவணங்களை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
இதேபோல, தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திர மையம் அமைப்பதற்கான சூழல் இருந்தும், போதிய இடவசதியின்மையால் செயல்பாடற்று கிடக்கிறது. விரைவில் அந்த மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு அல்லது ரேஷன் கார்டு ஆகியவை கொடுக்கப்பட்டு, (ரூ.1,500) சாதாரணக் கட்டணத்தில் பெறும் வகையில் எளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலம் 3 அல்லது 4 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால், இந்த சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், பாஸ்போர்ட் சேவையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதனைக் களைய 9487992991 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பாஸ்போர்ட் சேவை தொடர்பான குறைகளை அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.