கோவை, டிசம்பர் 26
கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நகைப்பட்டறை ஊழியர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை தேசிய துப்புறவு பணியாளர்கள் மறுவாழ்வு நல ஆணையம் வழங்கியது.
ஆர்.எஸ். புரம் பகுதியில் நகைப்பட்டறை கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஏழுமலை, கவுரிசங்கர், சூர்யா ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய துப்புறவு பணியாளர்கள் மறுவாழ்வு நல ஆணையர் ஜெகதீஷ் கிரேமானி நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, தனியார் உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்த கவுரிசங்கரின் குடும்பத்தினருக்கு வீடு வழங்கவும், அவரது சகோதரர் சூர்யகுமாருக்கு இலவச கல்வியும், தாய் யசோதாவிற்கு வேலைவாய்ப்பும், ஏழுமலையின் சகோதரர் பூபதிக்கு இலவச கல்வியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டின் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து ஒரு முறை இறுதி நிவாரணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகள் இது தொடர்பாக இதுவரை ஆய்வு நடத்தவில்லை.

இது தொடர்பாக கோவையில் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் எத்தனை கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். கூடுதல் இயந்திரங்களை மாநகராட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு இது போன்ற நிதியுதவிகள் இனிமேல் வழங்கப்படாது. கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக மாநகராட்சிக்கு மட்டுமே மக்கள் தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் போதிய பாதுகாப்பின்றி கழிவுகளை அகற்றிய 144 பேர் இறந்துள்ளதாகத் தன்னார்வ நிறுவனம் அளித்த ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்தப்படும். என்றார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.