டிசம்பர் 21
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா- கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என நீதிமன்றம் கூறி உள்ளது. இதனைத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
திமுக தலைவர் கருணாநிதி: அநீதி வீழும்; அறம் வெல்லும்.
திமுக எம்பி கனிமொழி:- 2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய அழுத்தம் இருந்த நிலையில், தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. 2ஜி அலைக்கற்றை வழக்கைப் பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்குத் தீர்வு கிடைத்துள்ளது. நீதி வென்றிருக்கிறது, தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த பெரிய வெற்றி. 2ஜி வழக்கு அனுமானத்தில் போடப்பட்டது. எந்த ஆதாரமும் இன்றி வழக்கு தொடரப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்:- அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்கப் போடப்பட்ட வழக்குதான் 2ஜி. இந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து, திமுக எந்தத் தவறும் செய்யவில்லை என நிரூபணமாகி உள்ளது.
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்:- எல்லாமே இனி வெற்றிதான். தவறான அரசியல் உள்நோக்கத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெட்ட எண்ணத்தில் தொடரப்பட்டது இந்த வழக்கு. எவ்வளவோ சூது, சூழ்ச்சிகளைச் செய்தார்கள். நீண்ட கால வழக்கு வாதத்திற்குப் பிறகு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நியாயம் வென்றுள்ளது. வெற்றிச் சிறகடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். பொய் வழக்குகளைப் போட்டு உடைத்திருக்கிறோம். திமுக இனி நிமிர்ந்து நிற்கும். மீண்டும் வெல்லும்.
த.மா.க. தலைவர் ஜி.கே வாசன்:- நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்:- நீதிமன்றத் தீர்ப்பு திமுகவிற்கு மேலும் பலத்தை அதிகரிக்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:- நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை எனக் கூறமுடியாது
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு:- 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்:- குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது, தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி: 2ஜி வழக்கை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு, தீர்ப்பு ஒரு பாடம்.
திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன்: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கில் வென்றுள்ளோம்.
திமுக எம்பி திருச்சி சிவா: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, திமுக மீது சுமத்தப்பட்ட களங்கம் விலகியுள்ளது.
காங்., தலைவர் திருநாவுக்கரசர்: 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
விசிக தலைவர் தொல். திருமாவளவன்:- அனைத்து இழப்புகளையும் சரிசெய்யும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. சிபிஐ நேர்மையாக நடக்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி:- 2ஜி வழக்கின் தீர்ப்பு பொய்மையின் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு. வாய்மை வென்று உள்ளது என்று நெருப்பாற்றில் நீந்தி திமுக வெளிவந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்:- அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பழிசுமத்திய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாத முறைகேட்டைப் பெரிதுபடுத்தி பாஜக பிரச்சாரம் செய்தது.
டிடிவி தினகரன்:- 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி. தமிழர்களாக இருந்து விடுதலைப் பெற்றது மகிழ்ச்சி. எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி (டுவிட்டர்):- டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து தனது நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம். ஜெயலலிதா வழக்கில் முதலில் விடுதலை செய்து மீண்டும் தண்டனை வழங்கப்பட்டதுபோல் 2ஜி வழக்கிலும் நிலைமை மாறும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:- 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
திமுக எம்பி கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்:- இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வளவு நாளும் எல்லோருமே கஷ்டப்பட்டு விட்டோம். இந்த வழக்கு நிச்சயம் பொய்யான வழக்குதான். இப்போது, தர்மம் வென்றது. நீதிவென்றது. அதன் மூலம் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கூறியுள்ளனர்.