டிசம்பர் 21
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு என்ற தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டதாக ஆ. ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் இந்த வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி அறிவித்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.