டிசம்பர் 19
விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சூரிய மண்டலத்தைச் சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி ஆகும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே, சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று (டிச.19) காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.,20-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளார் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில், காலை முதல் நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானைத் தரிசனம் செய்யப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
நன்மை பெறும் ராசிகள்: கடகம், துலாம், கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகார ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்