கோவை, டிசம்பர் 14
புரூக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்றியதற்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருவதாக கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த கிருஷ்ணசாமி ரோடு ( புரூக்பாண்ட் சாலை ) கடந்த 2015-ம் ஆண்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இந்த போக்குவரத்து மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூ மார்க்கெட் வழியாக சென்றும், காந்திபுரம் வடகோவை மேம்பாலம் மார்கமாக சென்றும் மேட்டுப்பாளையம் சாலையை அடைந்தன.
அனைத்து வாகனங்களும் பூமார்க்கெட் பகுதிக்குள் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைவதனால், பூ மார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பல்வேறு தரப்பினரும் புரூக்பாண்ட் சாலையை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆகியோர் புரூக்பாண்ட் சாலைக்குச் சென்று அந்த சாலையை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி புரூக்பாண்ட் சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

ஒரு சிலர் இந்த மாற்றத்தை ஏற்காத போதிலும் பொதுமக்கள் பலரிடையே இந்த போக்குவரத்து மாற்றம் வரவேற்பை பெற்றுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-
பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் என்ற பலரின் கோரிக்கையின் பேரிலே புரூக்பாண்ட் சாலையை இரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்தோம். அதன்படி, சாலையில் தடுப்பு கற்கள் மற்றும் பேரிகார்டுகள் ( barricades) அமைக்கும் பணி முடிந்து கடந்த 9-ம் தேதி இருவழிப் பாதையாக மாற்றி பொதுமக்கள் உபயோகத்திற்காக விடப்பட்டது.
வரவேற்பு
இந்த சாலை இருவழிப்பாதையாக மாற்றியமைத்தால் பலரும் பயனடைந்துள்ளனர். தினந்தோறும், வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், இத்திட்டம் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்திருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால், சிலர் இந்த திட்டத்தால் புரூக்பாண்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையான காரணம் என்னவென்றால், ஒரு வழிப்பாதையாக இருந்த போது புரூக்பாண்ட் சாலையில் செல்லும் வாகனங்கள் சற்று துரிதமாக செல்லமுடியும். ஆனால், தற்போது இருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால் சற்றே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தும் உள்ளது.
கிக்கானி சந்திப்பு
மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து புரூக்பாண்ட் சாலை வழியாக அவினாசி சாலை மேம்பாலத்திற்கு செல்லும் வாகனங்கள் அதிகமாக வருகின்றனர். மற்ற மூன்று வழித்தடங்களை காட்டிலும் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
எனவே, கிக்கானிக் சந்திப்பு சிக்னலில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து அவினாசி சாலை நோக்கி வரும் வாகனங்களுக்கு சற்று அதிக நேரம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள "மேனுவல் கண்ட்ரோல்" ( manual control) இயந்திரம் இந்த சிக்னலிலும் பொருத்தப்படும். ஒருவார கால இடைவெளியில் இந்த பணிகள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.