டிசம்பர் 12
ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் என கவுசல்யா தெரிவித்துள்ளார்.
உடுமலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தண்டனை அறிவித்தது. கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், 5 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு பேருக்கு முறையே ஆயுள்தண்டனையும், 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவுசல்யா, சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும். இந்தக் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும். மேலும் சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.
அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். 3 பேருக்கும் தண்டனை பெற்றுத் தரும் வரை தனது சட்ட போராட்டம் ஓயாது. சாதி, ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். எனக்கும், சங்கரின் குடும்பத்தாருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதி வெறியர்களுக்கு இந்தத் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.