டிசம்பர் 09
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தனியாருக்கும் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனத்துறையினருக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் காட்டெருமைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, தனியார் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில் பசுமையான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தப் புற்களை உண்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகப் படை எடுக்கத் துவங்கியுள்ளன. பர்லியார் பகுதியில் 2 காட்டுயானைகளும், கோழிக்கரை கிராமத்தில் ஒற்றை யானையும், கே.என்.ஆர் பகுதியில் 3 காட்டுயானைகளும் முகாமிட்டுள்ளன. இந்தக் காட்டுயானைகள் எந்த நேரத்திலும் சாலைக்கு வரக்கூடும் என்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஒட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.