கோவை, டிசம்பர் 09
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய இந்திய கடற்படையைக் கண்டித்து ரெட் பீல்ட்ஸ் சாலையிலுள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவினாசி சாலையில் இருந்து கப்பற்படை அமைந்துள்ள சாலையில் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அப்போது, மீனவர்களைக் காப்பற்ற மத்திய, மாநில அரசு தவறி விட்டதாகவும், பத்து நாட்கள் ஆகியும் முழுமையாக மீனவர்களை மீட்க முடியாத மத்தியஅரசு, கப்பற்படையை இழுத்து மூட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.

மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். தமிழ்ஈழப் படுகொலை நடந்த போது இலங்கைக்குப் போர் கப்பல் கொடுத்த மத்திய அரசு, மீனவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை என்றும், மாநில அரசு இறந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, குஜராத் மீனவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, இது ஜனநாயக நாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பாகுபாடு பார்க்கக்கூடாது எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.