கோவை, டிசம்பர் 6
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் பயனடையும் வகையில் துணைவேந்தர் உதவித்தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மை பகுதிகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க மற்றும் முனைவர் படிப்பிற்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் துணைவேந்தர் உதவித்தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாணவருக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு ஆண்டிற்கு ரூ.75,000 ஆராய்ச்சி உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு அனைத்து முனைவர் படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இதற்காக நடப்பாண்டில் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 17 விண்ணப்பங்களிலிருந்து 4 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி மாணவர்களுக்கு உறுதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, முதுகலைக் கல்லூரி முதல்வர் உ. சிவக்குமார், தேர்வான மாணவர்களிடையே தரமான ஆராய்ச்சி மற்றும் உயர்தர வேளாண் ஆய்வு வெளியீடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
இதுகுறித்து இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள் கூறுகையில், ''விவசாயிகளுக்கு உதவும் புதிய ஆராய்ச்சிகளை கண்டறிய இதுபோன்ற ஊக்கத்தொகை மாணவர்களை ஊக்குவிக்கிறது. மேலும், மற்ற மாணவர்களிடையே தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்கம் அளிக்கிறது. ஆராய்ச்சிக்கான உதவித்தொகை எங்களது படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான செலவிற்கு பயனுள்ளதாக உள்ளது'' என்றனர்.
