கோவை, நவம்பர் 28
"WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சாலையில் எழுதிய வாலிபர்களிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று அதிகாலை பீளமேடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்புக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிமுக-வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயில் தான் காரணம் என்று திமுக-வினரும் பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டிவந்த நிலையில், ஒரு வழிப்பாதையில் பயணித்த லாரியே விபத்துக்குக் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.
இந்த சூழ்நிலையில், ரகுபதி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகில் "WHO KILLED RAGU?" என்ற வாக்கியத்தினை சிலர் எழுதிச்சென்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் வருண் (26) மற்றும் பிரசாந்த் (27) என்ற இரு வாலிபர்கள் அந்த வாக்கியத்தினை எழுதியதாகச் சந்தேகித்து நேற்று இரவு இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இன்று காலையும் பீளமேடு காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சாலையில் வாக்கியம் எழுதியது யார்? எதற்காக எழுதினார்கள்? என்பது தொடர்பாக மட்டுமே விசாரிக்கிறோம்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இருவரும் சின்னியம்பாளையம் பகுதியில் ரகுபதி வீட்டின் அருகே வசிக்கும் பட்டதாரிகள்.
ரகுபதி உயிரிழந்த ஆதங்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் என்றார்.