கோவை, நவம்பர் 26:
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நுழைவு வாயிலில் மோதி வாலிபர் பலியான விவகாரத்தில், டிப்பர் லாரி மோதியதாலேயே வாலிபர் மரணம் அடைந்துள்ளதாகவும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்படதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (32). அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழனி கோவிலுக்கு செல்வதற்காக சின்னியம்பாளையம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனம் மூலம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் புறப்பட்டார்.
நள்ளிரவு 2 மணியளவில் ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் ஹோப்ஸ் காலேஜ் பகுதிக்கு வரும்போது அப்பகுதியில் அ.தி.மு.க.வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயிலில் மோதி பலியானதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க.வினர் அலட்சியமாகவும், சாலையை ஆக்கிரமித்தும் நுழைவு வாயில் அமைத்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி நேற்று மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா-விடம் மனு அளித்தார்.
இந்த சூழலில் டிப்பர் லாரி மோதிய விபத்திலேயே ரகுபதி பலியானார் என்றும், விபத்திற்கு காரணாமான லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் கோவை மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பாக, போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
ரகுபதி என்ற வாலிபர் பலியான விபத்தில் மஞ்சள் நிற லாரி ஒன்று சாலை விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக ஒருவழிப்பாதையில் பயணித்ததே விபத்திற்கு காரணம் என்று தெரிவந்துள்ளது. விபத்து நடந்த பகுதியின் அருகில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது, டிப்பர் லாரி ஒன்று சிங்காநல்லூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாக ஹோப்ஸ் மேம்பாலம் அருகே வந்து ஒருவழிப் பாதை மூலமாக அவினாசி சாலைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இந்த டிப்பர் லாரியே விபத்திற்கு காரணம் என்று தெரிந்தவுடன், சம்மந்தப்பட்ட லாரியின் பதிவெண்ணை கொண்டு ஓட்டுனரை தேடும் பணியில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டனர். அப்போது, லாரியை ஒட்டி வந்தவர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரது மகன் மோகன் (31) என்பது தெரிவந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த லாரியானது மாநகராட்சிப பகுதியில் குப்பை அள்ளும் பணயில் ஈடுபட்டு வருகிறது. குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு பணிமனைக்கு சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது.

நள்ளிரவு நேரம் என்பதால் விபத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற நோக்கத்தோடு லாரி ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது லாரி ஓட்டுனர் பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.