கோவை, நவம்பர் 13
கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில், புள்ளிமான் ஒன்று கடந்த வாரம் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. சுட்டித்தனமாக துள்ளித்திரியும் இந்த குட்டிமான்களை காண பொதுமக்களும் குழந்தைகளும் இப்பூங்காவில் குவிந்துவருகின்றனர்.

கோவை நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வ.உ.சி பூங்கா காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் மயில், பாம்பு, பச்சைக்கிளி, கழுகு, குரங்கு என பல்வேறு வகையான உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், அறிய வகை மான் இனங்களான உயரமான கடை மான்களும், அழகான புள்ளிமான்களும் இங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை புள்ளிமான் ஒன்று அழகான ஆண் மானையும், அடுத்த இரு நாட்களில் ஒரு பெண் மானையும் ஈன்றுள்ளது. இதனால், 25 ஆக இருந்த புள்ளிமான்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக அதிகரித்துள்ளது.

‘அழிந்துவரும் அறியவகை மான் இனமான, புள்ளிமான்களை இங்கு பாதுகாப்பாக வளர்த்து, பராமரித்து வருகின்றோம். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அழிப்பதால், அனைத்து புள்ளிமான்களும் உற்சாகமாக துள்ளித் திரிகின்றன. புதிதாக பிறந்துள்ள மான் குட்டிகள், பார்வையாளர்களை மட்டுமின்றி பூங்காவின் பராமரிப்பாளர்களையும் கவர்ந்து விடுகின்றன. இங்குள்ள புள்ளிமான்கள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார் வ.உ.சி பூங்காவின் இயக்குனர் திரு. செந்தில் நாதன்.
தாய் மானின் கால்களுக்கு இடையில் சுற்றித்திரிந்து, பால் குடிக்கும் இந்த மான் குட்டிகளை காண நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.
‘படங்களில் பார்த்த புள்ளிமான்களை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, பிறந்த ஒரு வாரம் ஆன, குட்டி மான்களை இப்போது தான் பார்க்கின்றோம். அவை செய்யும் சேட்டைகள் மிக அழகாக உள்ளது. வார விடுமுறையில் தவறாமல் இங்கு வந்து குட்டி மான்களை பார்த்துச் செல்வேன்’ என்று கூறினார் பள்ளி சுற்றுலா வந்த முதலாம் வகுப்பு மாணவி வஹிஷா.