கோவை, நவம்பர் 05: வடகோவை மேம்பாலத்திற்கு கீழ் அமைந்துள்ள 'U' வளைவு சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால் இப்பகுதியில் வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவ மழையால் இந்த வளைவில் மழைநீர் தேங்கி நீர் குட்டையைப் போல் காட்சியளிக்கின்றது.

கிராஸ்கட் ரோட்டிலிருந்து பவர் ஹவுஸ் மற்றும் 100அடி ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் வளைவதற்காக வடகோவை மேம்பாலத்திற்கு கீழ், 'U' வளைவு சாலை உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனரக வாகனங்கள் சென்றுவருவதாலும் தரமான சாலை அமைக்கப்படாததாலும் இந்த வளைவு மிக மோசமாகச் சேதமடைந்து, ஆபத்தான பள்ளமாக மாறியுள்ளது. இதனால், தினமும் இந்த வளைவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருவதாக இப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் புகாரளிக்கின்றனர்.
'கிராஸ்கட் ரோட்டிலிருந்து பட்டேல் ரோட்டிற்கு செல்லும் வாகனங்களும், மேம்பாலத்தின் கீழ்வழிச்சாலையிலிருந்து ராம்நகர் செல்லும் வாகனங்களும் இந்த வளைவில் சந்திக்கின்றன. சுமார் மூன்றடி ஆழமுள்ள பள்ளமாக இந்த வளைவு மாறியுள்ளதால், பள்ளத்திலிருந்து மேல்நோக்கி வர அதி வேகமாக வாகனத்தை இயக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், வேகத்தடைகள் இல்லாததால் கிராஸ்கட் ரோட்டிலிருந்து வேகமாக வரும் வாகனங்கள், பள்ளத்திலிருந்து மேலே வரும் வாகனத்தோடு மோதுகின்றன. இதனால், தினமும் இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் முதியவர்களும், குழந்தைகளோடு வளைவைக் கடப்பவர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.' என்றார் வடகோவை மேம்பாலத்திற்கு அருகில் சைக்கிள்கடை நடத்திவரும் திரு. K. ராஜாங்கம்.

மேலும், இந்த வளைவில் ஆட்டோக்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்து மேலும் சிரமமாகின்றது.
'தினமும் இந்த வளைவை இரு சக்கர வாகனத்தில் கடப்பது கடும் சவாலாக உள்ளது. உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 'U' வளைவு சாலையைப் போல், இந்த வளைவும் அகலமாக்கப்பட வேண்டும். கிராஸ்கட் ரோட்டிலிருந்து வரும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க, வேகத்தடைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றி, இருசக்கர வாகனங்கள் மட்டும் இந்த வளைவைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார் தனியார் கல்லூரி ஆசிரியர் திரு. முருகன்.
