கோவை, நவம்பர்.5: கோவையில் லஞ்சம் வாங்கிய மூன்று போலீசாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சின்னராஜ். இவருடன் தலைமை ஏட்டு கனகராஜ் மற்றும் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் கடந்த 2-ம் தேதி இரவு கள்ளப்பாளையம் பிரிவு அருகே வாகனதணிக்கை நடத்தினர். அப்போது அவ்வழியாக கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி லஞ்சம் பெற்றனர்.
இவர்கள் லஞ்சம் வாங்குவதை அவ்வழியாக சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். மூர்த்தி பார்த்தார். உடனடியாக மூவரிடமும் விசாரித்ததில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.