கோவை, நவம்பர் 1: கோவை - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் என்.எச்.67 சாலையானது 36 கி.மீ தூரம் கொண்டது. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் உதகைக்கு செல்லும் ஒரே வழியான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன.
மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது பணிக்காக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் கோவை நகரின் மத்தியப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும் போது, காற்று வேகமாக வீசுவதால், அவர்களது கண்களில் மணல் துகள்கள் விழுந்து, விபத்துகளும் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றன.
இதேபோல, அவினாசி சாலையில் (என்.எச்.67) வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் இதே இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இது தொடர்பாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கார்த்திக் என்பவர் கூறுகையில், நான் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போதும், மணல் துகள்கள் தன் முகம் மீது விழுகிறது. காரணம், சாலையின் ஓரங்களில் மணல்கள் குவிந்து கிடப்பதே ஆகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சாலையில் கிடக்கும் மணல்துகள்களை துப்புறவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்துவதை பார்த்துள்ளேன். ஆனால், தற்போது, அந்தப் பணிகளை காணமுடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், விரிவாக்கப் பணிகளால் சாலைகளில் உருவாகும், மணல் திட்டுக்களால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பொதுமருத்துவர் மதிவாணன் பேசுகையில், நமது, நவீன வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்களுக்கு தூசுகளால் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கிடக்கும் மணல்களினால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள், முகத்தில் முகமூடி அணிந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.