கோவையின் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், நாய் கடியால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.
'இரண்டு மாதத்திற்கு முன், தெருவில் நடைபயிற்சி செய்யும்போது தெருநாய் என்னை கடித்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பு ஊசிகளும் ஐந்து தையல்களும் போடப்பட்டாலும், பல நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தெருவில் நடைபயிற்சி செய்வதையே நிறுத்திவிட்டேன். தெருநாய் தொல்லையால் அடுத்த தெருவிற்கு செல்வதற்கும் வாகனத்தையே பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது' என்றார் நவவூர் பிரிவு, எஸ்.கே.வி நகரில் வசிக்கும் வரதராஜன்.

குறிப்பாக, தினமும் 40 முதல் 50 பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
'கந்திமாநகர் பகுதியில் பத்துக்கும் மேல் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்களையும், இரவு நேரங்களில் பணி முடிந்து திரும்புபவர்களையும் கடிக்கத் துரத்துகின்றன துரத்துகிறது. மேலும், சாலையை கடக்கும் வாகனங்களையும் கடிக்கத் துரத்துவதால் இந்த பகுதியில் வாகன விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து விலங்கு நல அமைப்புகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று புகாரளித்தார் காந்திமாநகரில் வசிக்கும் ராஜசேகரன்.
கடந்த 2014 ஆம் வருடம், மாநகராட்சி சார்பாக தெருநாய்க்களுக்கு கருத்தடை செய்து பராமரிப்பு செய்யும் பணிகளை ஹ்யூமன் அனிமல் சொசைட்டி ( Humane Animal Society) மற்றும் பிபுல் ஃபார் அனிமல் ( People for Animal) யூனிட் II ஆகிய தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 20 வார்டுகளை ஹ்யூமன் அனிமல் சொசைட்டியிடமும், மீதமுள்ள 80 வார்டுகளை பிபுல் ஃபார் அனிமல் யூனிட் II விடமும் வழங்கியது. இந்த அமைப்புகள் தெருநாய்க்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு நோயுற்ற தெருநாய்களுக்கு சிகிச்சையளித்து பராமரித்தும் வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 23583 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் கூறுகின்றனர். ஆனால், தெருநாய்களால் உண்டாகும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
இதுகுறித்து பிபுல் ஃபார் அனிமல் யூனிட் II அமைப்பைச் சேர்ந்த கல்பனா கூறியதாவது, '2014 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 19942 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளோம். மழைக் காலங்களில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் தெருநாய்க்களின் உடல் வெப்பநிலை இயல்பு நிலைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்படும். அதனால் கடந்த மூன்று மாதங்களாக அறுவை சிகிச்சை செய்யும் பணிகளை நிறுத்திவைத்துள்ளோம். அடுத்த வருடம் சுமார் எட்டாயிரம் தெருநாய்க்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

'சென்ற வருடம் சுமார் எட்டு தெருநாய்கள் மட்டுமே எங்கள் தெருவில் சுற்றித்திரிந்தன. இப்போது முப்பதுக்கும் மேல் தெருநாய்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நாய் குட்டிகள் தெருக்களில் காணப்படுகின்றன. தெருநாய் பராமரிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் உட்பட யாருமே சரியாக செயல்படுவதில்லை' என்று புகாரளித்தார் கணபதி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரம்மாள்.
இதுபற்றி, ஹ்யூமன் அனிமல் சொசைட்டியை சேர்ந்த மினி சீனிவாசன் கூறியதாவது, 'தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கும். நகராட்சி நிர்வாகம், 2013 ஆம் ஆண்டு வரை ஒரு தெருநாய்க்கு செய்யும் அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கு தலா 445 ரூபாய் வழங்கிவந்தது. இந்த தொகையை உயர்த்தி 700 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இன்றுவரை 445 ரூபாய் மட்டுமே வழங்கிவருகிறது. இந்த தொகையும் காலதாமதாகவே வழங்கப்படுகிறது. இதனால் தெருநாய் பிடிக்கும் ஆட்களுக்கு சம்பள பற்றாக்குறை ஏற்ப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் அரசு நிர்ணயித்த தொகையை முறையாக வழங்கி ஒத்துழைத்தால் தெருநாய் பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்படும்' என்றார்.
இதுகுறித்து நகர் நல அலுவலர், சந்தோஷ் குமார் கூறியதாவது, 'ஒரு தெருநாயின் அறுவை சிகிச்சைக்கு அளிக்கப்படும் தொகை 7௦௦ ரூபாயாக உயர்த்தப்பட்டது உண்மைதான். ஆனால் அது பஞ்சாயத்து பகுதிகளில் மட்டும்தான், என்று அரசாணையில் தெளிவாக உள்ளது. நகராட்சிக்கு இன்னும் இந்த தொகை உயர்த்தப்பட்டதாக தகவல் வரவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக தற்போது கொடுக்கப்படும் தொகை சற்று தாமதமாகிறது. விரைவில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்' என்றார்.

'தெருநாய்களுக்கு செய்யும் கருத்தடை சிகிச்சையால் அதன் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால், அவை வாகன ஓட்டிகளுக்கு எப்பொழுதும் பெரும் சிரமத்தை கொடுக்கின்றன. மேலும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதால், அவைகளும் ரேபிஸ் நோய் தொற்றோடு சுற்றி வருகின்றன . இந்த தெருநாய்களால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று எச்சரித்தார் ஆர்.எஸ்.புரம், மேற்கு வெங்கடசாமி ரோட்டில் வசிக்கும் ஒரு குடியிருப்புவாசி.