நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் பரவிவரும் நிலையில் காந்திபார்க் ரவுண்டானா கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளதால் விரையில் மாநகராட்சி அதனை தூய்மைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்திபார்க் ரவுண்டானா சாலையானது ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் உக்கடம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் பகுதியாகும். அன்றாடம் இந்தச் சாலையினை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ரவுண்டானாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளது.
இந்த ரவுண்டானாவில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நீர் அலங்காரத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள இதனை முறையாக பராமரிக்காத காரணத்தினால் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக மாறிவருகிறது.

இதுகுறித்து காந்திபார்க் பகுதியில் வசித்து வரும் எஸ்.ராஜரத்தினம் என்பவர் கூறுகையில், கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்து வரும் நிலையில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அன்றாடம் பொதுமக்களின் குடியிருப்புகளிலும், விடுதி மற்றும் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்றுள்ள வீடுகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அவ்வாறு, மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு சமீபகாலத்தில் 6 லட்சம் ரூபாய் முதல் 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பாதுகாக்க எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்றவற்றை கண்காணிக்க தவறிவிடுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவிவருவதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலர்களும் தீவிரமான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை மட்டும் ஆய்வு மேற்கொண்டு அபராதம் வசூலிக்கும் அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற பொதுச் சொத்துக்களை மறந்து விடுகின்றனர். பொதுமக்களிடம் மட்டும் அபராதம் விதிக்கும் அதிகாரிகள், உரிய கடமையை செய்யத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்திடமும் அபராதம் வசூலிப்பார்களா என கேள்வியெழுப்பினார்.
இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், "காந்திபார்க் ரவுண்டானாவில் உள்ள நீர்த் தொட்டியில் தேங்கியுள்ள நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக, காந்திபார்க் ரவுண்டானா உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டினை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.