கோவையில் நடைபெற்ற 110-வது பட்டாலியன் ராணுவப் படையில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 2500 பேர் கலந்து கொண்டனர்.

110-வது பட்டாலியன் ராணுவப் படையில் 8 ராணுவ படை வீரர்களுக்கும், 3 துப்புரவுப் பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

இன்று (அக்.,23) காலை தொடங்கிய இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, உயரம், மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதித்திறன் தேர்வு நடைபெற்றது. 11 பேருக்கான காலியிடங்கள் மட்டுமே உள்ள பணிக்கு ஏராளமானோர் பங்கேற்றிருப்பது ராணுவத்தில் பணியாற்றுவதன் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.