கோவையில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி 21-வது வட்டம் முத்தண்ணன் குளம் உள்பட பல குளங்கள் பல ஆண்டுகளாக நச்சுக்கழிவு நீரால் நிரம்பியுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த நீரில் மிகக் கடுமையான பேக்டீரியாக்கள், அமினோ அமிலங்கள் மிகக் கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடிக்கவோ, வேறு பயன்பாட்டிற்கோ நீரை உபயோகித்தால், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. தற்போது, இந்த நீரைப் பயன்படுத்தி வரும் மேற்படி பகுதி மக்களும், கால்நடைகளும் நோய்களுக்கும், பல்வேறு சிரமங்களுக்கும் ஆட்படுவதுடன் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கும் ஆளாக நேரிடும்.

எனவே, முத்தண்ணன் குளம் உள்பட நகரில் உள்ள அனைத்துக் குளங்களிலும், தேக்கி வைத்துள்ள நச்சுக்கழிவு நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்களுக்கு வரும் நச்சுக் கழிவு நீரை பாதாள சாக்கடையில் இணைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப போர்கால நடவடிக்கை எடுத்து, நிலத்தடி நீர் மேலும் மோசமடையாமல் காக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டது.