உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனித்திறமை உண்டு. திறமையை வெளிக்கொண்டுவர அந்த உயிரினம் செய்யும் முயற்சியே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது.
முயற்சிக்காத காரணத்தால் வெற்றிக்கனியை பெற முடியாத சிலர், தனது பிரச்சனைகளை சமுதாயத்திற்கு கூறி தோல்வியை நியாயப்படுத்துவர். விடா முயற்சியுடன் உழைக்கும் பலர் எந்த சூழலிலும் வெற்றியை தனக்குரியதாக மாற்றிக்கொள்கின்றனர். அவ்வாறு தனது வறுமையிலும் நிறைந்த வாழ்கை சூழலிலும், தள்ளாடும் வயதினிலும் தடகளத்தில் சாதித்து வருகிறார் ஐம்பத்தாறு வயது இளைஞர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (56). வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர் ஓட்டப்பந்தயத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரிந்து வருகிறார்.

தனது 30 வயதில் ஓட்டப்பந்தயத்தின் மீது ஆர்வம் கொண்ட ராமசாமி இன்றுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை குவித்து வருகிறார்.
குடும்ப சூழல், பெற்ற இரண்டு குழந்தைகளை கரையேற்றுதல் போன்ற பல்வேறு பொறுப்புகள் இவர்மீது படிந்திருக்க கார் ஓட்டும் தனது பணியில் அவற்றை சரிகட்டி வந்தார். அவ்வப்போது சிறு சிறு ஓட்டப்போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றார்.

கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய தடகளப்போட்டியில் 21 கி.மீ. ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 10 கி.மீ. ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்றது விளையாட்டின் மீதான இவரது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 2008-ம் ஆண்டு கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் 10 மற்றும் 5 கி.மீ ஓட்டப்போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களையும், 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்தார்.

தொடர்ந்து பல்வேறு ஓட்டப்போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் மாநிலங்கள் அளவில் 20 தங்கப்பதக்கங்களையும், 15 வெள்ளி பதக்கங்களையும், 10 வெண்கல பதக்கங்களையும் பெற்றார். அதேபோல், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 26 பதக்கங்களை பெற்றுள்ளார்.
இப்படியாக பதக்கங்களையும் குவித்த ராமசாமி, கடந்த மாதம் சீனா-வில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் 1500 மீட்டர் ஓடப்பிரிவில் கலந்து கொண்டார். இதில் அவரால் 12- வது இடத்தை பெற முடிந்தது. வறுமையால் ராமசாமியின் கால்களை கட்டிப்போட முடியவில்லை. இன்னும் பாதங்களை அழுத்தப் பதிந்து பல சாதனைகளை சொந்தமாக்குவேன் என்ற நம்பிக்க மந்திரம் ராமசாமியின் நடையில் உயிர் பெறுகிறது.
'போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்துகொள்ள பதக்கம் பெற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் பேருந்து வசதிக்கு கூட என்னிடம் பணம் இல்லை' என்று நொந்துகொள்கிறார் ராமசாமி.
ராமசாமி மட்டுமல்லாது இன்னும் பலர் திறமைகள் அதிகம் இருந்தாலும் அரசு முறையாக அவர்கள் மீது கவனம் செலுத்தாத காரணத்தால் வெளி உலகத்திற்கு தெரியாமலே போய்விடுகின்றனர்.
இவர் போன்ற மனிதர்களின் திறமைகளை ஊக்குவித்தால் நிச்சயமாக உலக நாடுகள் நம்மை திரும்பிப் பார்த்து தானே ஆக வேண்டும்.!