கோவை மாவட்டத்தில், தீபாவளி அன்று மட்டும் 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 0.5 சதவிகிதம் குறைவு என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கவுண்டம்பாளையத்தை மையமாகக் கொண்டு வடக்கு என்றும், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு என்றும், மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் கோவை மாவட்டத்தில் இயங்கிவருகின்றன . இங்கு சாதாரண நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். தீபாவளி, பொங்கல், புது வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.
அதன்படி, இந்த வருட தீபாவளிக்கு 12 கோடிக்கு மேல் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 6 லட்சம் ரூபாய் குறைந்து, 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
இதில் வடக்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.6 கோடியே 59 லட்சத்திற்கும், தெற்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.5 கோடியே 26 லட்சத்திற்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது.
இதுகுறித்து ஒரு டாஸ்மாக் அலுவலர் கூறியதாவது, "இந்த தீபாவளிக்கு அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை உயர்வு மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட காரணங்களால் சென்ற ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது" என்றார்.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 12 லட்சத்தி 46 ஆயிரத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையை விட குறைவாகும்.