டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு வேகமாக செயல்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதுவரை கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பே ஏற்படவில்லை. உயிரிழப்புகள் இல்லாததால் கோவையில் ஆய்வு செய்ய மத்திய குழு வரவில்லை. தண்ணீரை மாற்றி குடித்தால் காய்ச்சல் வருகிறது. டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த இரு மாதங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.