கோவையில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை துடியலூர் போலீஸார் 8 மணி நேரத்தில் கைது செய்தனர்.
ரத்தினபுரி, தில்லைநகரைச் சேர்ந்த சீனிவாசன் (20) என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்றிரவு 10 மணியளவில் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கொலை நடந்த 8 மணி நேரத்தில், குற்றவாளிகளான ஜீனத்குமார் (30), சூர்யபிரகாஷ் (27), செந்தில்குமார் (30) ஆகிய 3 பேரை ரத்தினப்புரி பகுதியில் உள்ள நாராயணசாமி லே அவுட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசன் மற்றும் கொலையாளிகள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான விக்கி என்பவர் ஜீனத்குமாருடன் சண்டையிட்டு மாயமாகியுள்ளார். இதனால், விக்கி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு சீனிவாசனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், ஜீனத்குமார், சூர்யபிரகாஷ் , செந்தில்குமார் ஆகியோருடன் சீனிவாசன், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள விக்கியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு விக்கி, வீட்டில் இருக்கிறாரா..? எனப் பார்த்து வருமாறு சீனிவாசனிடம் மூவரும் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், கத்தி மற்றும் கற்களை கொண்டு தாக்கி சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.