பட பட பட்டாசுகளும் தித்திப்பான இனிப்புகளும் நிறைந்த தீபாவளிப் பண்டிகை நாளை (அக்டோபர் 18) உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனைக் கொண்டாட பெரும்பாலான மாவட்டங்களில் கடைவீதிகளும் சாலைகளும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், தீபாவளியின் சிறப்பான பட்டாசுக் கடைகளோ மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
"ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் பெருமளவு குறைந்தது. உற்பத்தி குறைந்ததால், பட்டாசு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.

எனவே, மக்கள் பட்டாசுகளை வாங்குவதைக் குறைத்துவிட்டனர். தீபாவளிக்கு முந்தைய நாளிலாவது மக்கள் பட்டாசுகளை வாங்குவார்கள் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் அவ்வப்போது மழை பெய்வதால் பட்டாசு விற்பனை மேலும் பாதிப்படைகிறது" என்றார் பட்டாசு விற்பனையாளர் முருகன்.
குறிப்பாக, பிரதான சாலைகளில் உள்ள பெரிய பட்டாசு கடைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் குழந்தைகளோடு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். மற்ற சிறிய பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்குவோரின் வருகை மிக அரிதாக உள்ளது.

கடந்த 15 வருடங்களாக லாலிரோட்டில் பட்டாசு விற்பனை செய்யும் ஒருவர் கூறியதாவது:-
"பத்து வருடத்திற்கு முன் லாலிரோடு சந்திப்பு முதல் காந்தி பூங்கா வரை ஏழுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இருக்கும். மக்கள் கூட்டம் பட்டாசு கடைகளில் நிரம்பி வழியும். ஆனால், இந்த வருடம் இரண்டு கடைகள் மட்டுமே உள்ளது. அங்கும் மக்கள் கூட்டமேயில்லை. இதற்கு காரணம் மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தான்.
பண்டிகை நாட்களை மதுவோடும், தொலைக்காட்சியோடும், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களோடும் மட்டுமே கொண்டாடப் பழகிவிட்டோம். மேலும், உரிமம் வாங்க ஆகும் செலவு, வரிச் செலவு இவற்றோடு கடைகளில் மீதமாகும் பட்டாசுகளை பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவைப்பதற்கு ஆகும் செலவு என முதலீடு பெரிய அளவில் தேவைப்படுகிறது. இதில் பாதி கூட வருமானமாக கிடைப்பதில்லை" என்றார் வருத்தத்தோடு.
மக்களின் மனநிலையிலும், வானிலையிலும் சாதகமான மாற்றங்கள் வரும் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர் பட்டாசு வியாபாரிகள்.