திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல், சேலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து நாளை (அக்.,17) காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 06049, பிற்பகல் 2.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடைகிறது.
இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 17 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயிலானது, குளித்தலை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பங்கராபேட்டை போன்ற நிறுத்தங்களில் நிறுத்தப்படும். திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 5.30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல, ரயில் எண் - 82638 கோவை - சென்னை இடையிலான சுவிதா சிறப்பு ரயில் (ஒருவழி) கோவையில் இருந்து வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது.
இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 18 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 23 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.