மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலணிக்கு மிக அருகில் அமைந்துள்ளது புதிய பேருந்து நிலையம். துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம் வழியாக உதகை செல்லும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

சுமார் 3.09 ஏக்கர் பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில், கடந்த 2010-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த புதுபேருந்து நிலையத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், லிஃப்ட், மின் கடிகாரம், உடல் ஊனமுற்றோருக்கான நவீன கழிப்பறைகள், வண்ண மீன் கண்காட்சியகம், சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி போன்ற சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டது. இதற்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த வசதிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன . இதுகுறித்து விசாரித்ததில் இந்த சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு சுமார் ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது.
"மாற்றுத் திறனாளிகளால், பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாது. அதனால் தான் எங்களுக்காக சிறப்பு இலவசக் கழிவறைகள் அரசால் அமைக்கப்படுகிறது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை மூடித்தான் இருக்கிறது. இதனால் பயணங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். கட்டணம் செலுத்தி சுகாதாரமற்ற முறையில், சாதாரண கழிவறைகளை தான் பயன்படுத்தி வருகிறோம்" என்றார் பேருந்திற்காக காத்திருந்த மாற்றுத் திறனாளி சுரேஷ்.

பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் ஒரு ரூபாய் தான். ஆனால் புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து ரூபாய்க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச ஓய்வறைகளைப் பயன்படுத்த முப்பது ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகாரளித்தார் ஒரு பயணி.

பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியார் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என்பது அரசு விதிமுறைகளில் ஒன்று. ஆனால் தினமும் இரவில் இரண்டுக்கும் மேல் தனியார் சொகுசு பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுன்றன . மேலும் வாகனங்கள் நிறுத்தும் மேல் தளத்தில் வங்கிகளால் கையகப்படுத்தப்படும் வாகனங்கள் முறையான அனுமதியின்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குத்தகைக்காரர்களின் உதவியோடு நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பேருந்து நிலைய வளாகத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் சிற்றுண்டி மற்றும் உணவகங்கள், பயணிகளுக்கான பொது இடங்களை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மக்களின் பொது பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் தற்போது காணப்படும் முறைகேடுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளால் சரி செய்யப்பட வேண்டும். மக்கள் பணத்தில் அமைக்கப்பட்டு தூசிபிடித்து பழுதாகி கிடக்கும் இயந்திரங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு புதுப்பொலிவுடன் வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தரமான வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் என்பதற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் மட்டும் போதாது, பயணிகளின் மனநிறைவும் அவசியம் என்பதை மாநகராட்சி நிர்வாகம் உணர்வது எப்போது?