கோவை, திருப்பூர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதால் நீலகிரியில் டெங்கு பரவாமல் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அரசு முதன்மைச் செயலர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், டெங்கு குறித்த விழிப்புணர்வு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் இல்லாவிட்டாலும், டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநில எல்லை பகுதிகள் அருகில் இருப்பதால், அதிக விழிப்புணர்வுடன் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற சந்திராகாந்த் பி. காம்ளே அறிவுறுத்தினார்.
மேலும், கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர். கள ஆய்வின்போது, முதன்மைச் செயலாளர் காசிம் வயல் பகுதியில் சாக்கடை குப்பை கொட்டும் பகுதி மற்றும் காய்ச்சல் பாதித்த பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறும், கொசுப்புழு உருவாகா வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார். விளம்பரங்களின் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், இணை இயக்குநர் சுகாதாரம் ரகுபாபு, துணை இயக்குநர் பொற்கொடி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ராஜகோபால், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மேகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.