கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இன்று (அக்.,14) அதிகாலை விவசாய நிலத்துக்குள் உடல்நலக்குறைவால் சுருண்டு விழுந்த காட்டு யானை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அச்சுறுத்தி வருகின்றன . இந்த நிலையில், இன்று (அக்.,14) அதிகாலை யானைக் கூட்டங்கள் மதுக்கரை சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்செய்துவந்தன.
அப்போது, அதில் ஒரு பெண் யானை ஒன்று உடல்நலகுறைவால் விவசாய நிலத்திலேயே சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் யானையை எழுப்பி, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். எந்த முயற்சியும் பலனளிக்காததால், மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான வனத்துறையின் மருத்துவக்குழு விரைந்து வந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
சுமார் 9 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, கிரேனின் உதவியுடன் 40-வயது மதிக்கத்தக்க அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை காப்பாற்றிய வனத்துறையின் மருத்துவக் குழுவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் பெரியநாயக்கன்பாளையம் பாலமலைப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானைக்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.