தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பின் தனியார் மருத்துவமனையை அணுகி உயிருக்கு போராடி வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், இதனால் உயிரிழப்பு தவிர்க்க முடியாமல் போவதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டு பல்வேறு தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி உயிர்பிழைக்க செய்துள்ளனர்.
இதுகுறித்து, உயிர் பிழைத்த பெண்ணின் கணவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:- சோமனூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் எனது செந்த ஊர். அதே பகுதியில் சொந்தமாக நெசவுத்தொழில் செய்துவருகிறேன். எனது மனைவி காமாட்சி (23). எங்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த சூழலில் எனது மனைவிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு எனது மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறினர், இதனால் அதிர்ச்சியடைந்த நான் தொடர்ந்து எனது மனைவியை அழைத்துக்கொண்டு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனது மனைவியின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த சிவப்பணுக்கள் மிகவும் குறைந்துவிட்டதாகவும் கூறினர்.
தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு ரூ.60 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்திவிட்டு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு எனது மனைவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தனியார் இரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்றபின் அதனை எனது மனைவிக்கு செலுத்தினார்கள். தொடர்ந்து, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற கோரி அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதன்பின்னரே, கடந்த 9-ம் தேதி எனது மனைவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். எனது மனைவியை காப்பாற்ற பல தனியார் மருத்துவமனைகளை நாடிச்சென்ற எனக்கு கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் ஆறுதல் தந்து, நிச்சயமாக காமாட்சியை உயிருடன் மீட்டு தருவதாக உத்திரவாதம் அளித்தார். தொடர்ந்து, மருத்துவர்களுக்கு எனது மனைவியின் உடல்நிலை குறித்து தெரிவித்து, தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
மருத்துவர்களின் முயற்சியால் எனது மனைவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று (அக்.,14) அவர் பூரணமாக குணமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நம்பிக்கையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிவர்த்தி செய்துள்ளனர்.
இவ்வாறு நமக்கு பேட்டியளித்த கிருஷ்ணகுமார் உடனடியாக இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல்-ஐ சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் பெண்ணை உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்களை வெகுவாக பாராட்டினர்.
