கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோபிச் செட்டிப்பாளையத்தை அடுத்த நஞ்சே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர், சலவைத்தொழில் செய்து வருகிறார். அவருக்கு அனுஸ்ரீ என்ற 6 வயது மகள் இருந்தார்.
சிறுமி அனுஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் ரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, சிறுமி அனுஸ்ரீ கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு, சிறுமிக்கு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (அக்.,13) மாலை சிறுமி பரிதாபமாக பலியானார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பால், ஏற்படும் தொடர் உயிரிழப்புகளினால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 27 பேர் கோவை மாவட்டத்தையும், 12 திருப்பூர் மாவட்டத்தையும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரும் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.