இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுபேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கினை சிபிசிஐடி பிரிவினர் விசாரித்து வந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதில் சதாம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த வியாழனன்று (நேற்று) பாலக்காட்டில் தலைமறைவாக இருந்த சுபேர் தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்தபோது அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி மதுரசேகரன் சுபேரை வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, இன்று (அக்டொபர் 13) சுபேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.