ஜுலை மற்றும் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து, சரிசெய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மந்தமாக செயல்படுகின்றனர். இதனால், எதிர்வரும் மழைக்காலங்களில் அணைகளுக்கு வரும் நீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. எனவே, நகரில் உள்ள நீர்நிலைகளை சீர்செய்து, நீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு அளித்த பேட்டியில் சமூக ஆர்வலர் மணிகண்டன் பேசியதாவது, குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், பொதுப்பணித்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது.

நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், உடைப்பு ஏற்பட்டு நீர்தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை முறையாக பராமரித்தால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயத்திற்கு இந்த நீரை பயன்படுத்த முடியும். எனவே, உரிய நிதி ஒதுக்கி நீர்தேக்கங்கள் மற்றும் அணைகளை முறையாக பராமரித்து, எதிர்வரும் மழைக்காலங்களின் போது வரும் நீரை தேக்கி வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.