கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை உத்திர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வமைப்பின் பொருளாளர் பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிறைநுதல் செல்வி கூறுகையில், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்காமல் தமிழக அரசு மத்திய அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.
அரசு அச்சகத்தை இடமாற்றும் முடிவை கைவிட வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு பிறைநுதல் செல்வி தெரிவித்தார்.