மதுக்கரையில் அமைந்துள்ள மூன்று குட்டைகளின் தடுப்பணைகளும் பொதுப்பணித்துறையால் முறையாக பராமரிக்கப்படாததால் கடந்த மழையில் சேதமடைந்து கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது.
மதுக்கரை அருகே மையில்கல் பின் பகுதியில் ஒரு குட்டை, குரும்பப்பாளையத்தில் இரண்டு குட்டைகள் என மொத்தம் மூன்று குட்டைகள் உள்ளது. கடந்த சில வருடங்களாக மழை பெய்யாததால், நிலத்தடி வற்றிய நிலையில் இங்கிருந்த விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைகளுக்கு சென்றனர்.

இந்த குட்டைகளும் அதன் தடுப்பணைகளும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்பகுதியில் விவசாயத்தை தொடரும் சில விவசாயிகள் தனியார் நிறுவனத்தோடு இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இந்த குட்டைகளை தூர்வாரினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பருவ மழையால் தடுப்பணைகள் சேதமடைந்து தூர்வாரியும் பயனில்லாமல் தண்ணீர் வீணாகியுள்ளது. இந்த மழை நீர் குட்டைகளில் தேங்கியிருந்தால் விவசாயித்திற்கு பெருமளவு உபயோகப்பட்டிருக்கும் என அப்பகுதி வவிசாயிகள் வருத்தத்தோடு தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் கூறியதாவது:-
கோவைபுதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் வழியாக இந்த குட்டைகளுக்கு நீர் வருகிறது. குட்டைகளின் தடுப்பணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் நீரை உபயோகிக்க முடியாமல், பெருமளவு வீணாகி, கேரளாவை சென்றடைகிறது.
தடுப்பணைகளை சரிசெய்ய வேண்டி, பொதுப்பணித்துறையினரை அனுகியபோது, போதுமான நிதி இல்லை என்று பதிலளித்தனர். இந்த தடுப்பணைகளை சரிசெய்ய சுமார் 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் முழு மாவட்டதிற்கும் ஆண்டுக்கு வெறும் 25 லட்சம் ரூபாய் மட்டுமே பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்த குட்டைகள் மட்டுமின்றி மாவட்டத்தில் அமைந்துள்ள பல குட்டைகளும் இதுபோன்று பராமரிக்கப்படாமல் உள்ளது.

எனவே இந்த தடுப்பணைகளை சரிசெய்யும் முயற்சியில் விரைந்து இறங்கினால், அடுத்து வரும் வடகிழக்கு பருவ மழையின் நீரை சேமித்து நாம் உபயோகிக்களாம், விவசாயமும் செழிக்கும்" என்றார்.