ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரிக்கு எதிரே அமைந்திருக்கிறது சரோஜினி சாலை. இந்த சாலை சங்கனூர் ஓடையை கடந்து மகாத்மா காந்தி சாலையோடு இணைகிறது. இவ்வழியாக ஆவாரம்பாளையம், தண்ணீர் பந்தல் மற்றும் நவ இந்தியா போன்ற முக்கிய சந்திப்புகளை விரைவாக சென்றடைய முடியும். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளோடு ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.

கடந்த வாரம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளுக்காக இந்த தொழிற்சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு, இயந்திர கழிவுகள், பயன்படாத உபகரணங்கள், பழைய பொருட்கள் என அனைத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைத்தொட்டியில் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் குப்பைத் தொட்டி சில நாட்களில் நிரம்பி வழிய தொடங்கியது. தொடர்ந்து அந்த இடத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சாலையின் இரு ஓரங்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- இந்த சந்திப்பில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை, இது குறித்து பல முறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் குப்பை எடுக்கும் வாகனம் வந்து பல நாட்கள் கடந்துவிட்டது" என்றனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சமூக விரோதிகள் தொடர்ந்து தீ வைப்பதால் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத்தொட்டிகளை அகற்றிவிட்டதாகவும், இதனால் வேறுவழியின்றி சாலைகளில் குப்பைகளை கொட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைப்பதோடு, மழை நாட்களில் இந்த குப்பைகள் அருகில் உள்ள சங்கனூர் ஓடையில் கலந்து பெரும் அடைப்பை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற சூழலை உருவாக்குவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வளர் ஒருவர் கூறினார்.

மகாத்மா காந்தியின் வழியில் சுத்தமான தேசத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பெரும் பொருட் செலவுகளில் பல நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அவை இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதையே இந்த குப்பை மேடுகள் உணர்த்துகிறது.