கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்களது சிறந்த சேவையினை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பாரத ஸ்டேட் வங்கி, இஎப்ஐ கோயம்புத்தூர் அமைப்பினர் உள்ளிட்டு ரோட்டரி சங்கத்தினர் மற்றும் மாவட்ட சட்ட உரிமை கழகத்தினரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, இந்த களப்பணியில் இரண்டு டிராக்டர் அளவுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குளத்தை சுத்தம் செய்ய 8 வாரங்களுக்கு தேவையான உபகரணங்களை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் வழங்க உள்ளனர்.