தமிழ்நாட்டில் அதிகமாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட விஷக்காய்ச்சல் பரவிவருவதால் பொதுமக்களில் பலருக்கு மரணமும், கடும் உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுவருகிறது. இதையொட்டி திமுக கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய அக்கழகத்தினருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மருத்துவமனை ஆர்.எம்.ஓ சௌந்தரவேல்-யிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் பேசியதாவது :-
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு செயலற்று கிடக்கிறது. மருத்துவத்துறையில் பின் தங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் அந்த துறையை சரியாக கவனிக்காத காரணத்தினால் அத்துறை முடங்கியுள்ளது. அதன் சாட்சி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

குறிப்பாக கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறைவான எண்ணிக்கையை மருத்துவர்கள் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், உண்மையில் பலர் டெங்குவால் உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் 8 பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும், டெங்கு காய்ச்சல் மருந்து கையிருப்பில் இல்லை என்று தெரியவருகிறது. இதனால், இன்று கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரிகளை சந்தித்தேன். ஆனால், டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்பை மிக குறைவான அளவாக கணக்கு காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.