அன்னூர் தாலுகா கைக்கோலாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எலிசியம் குடியிருப்பு பகுதியில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற பொதுபயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது குடியிருப்பு வாசிகளின் சட்டப்போராட்டத்தினால் மூடப்பட்டுள்ளது.
எலிசியம் குடியிருப்பு வாரியத்தில் சுமார் 126 வீடுகள் உள்ள நிலையில், அரசின் விதிகளை மதிக்காமல் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பொதுபயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் ஆதரவோடு முறையான பராமரிப்பின்றி இயங்கிவந்த இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பற்றி அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தற்போது சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் செந்தில், சிம்ப்ளிசிட்டி நிரூபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- "எலிசியம் குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, அரசின் விதிகளை மதிக்காமல் பொது இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். அதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் தொடர்ந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

இதைப்பற்றி கட்டிட உரிமையாளரிடம் புகாரளித்த போது, அரசு வழங்கிய அனுமதி சான்றைக் காட்டினார். பின் நிலைமை மேலும் மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கடந்த மூன்று வருடங்களாக போராடிவருகிறோம். சுமார் 3500 சதுர அடி கொண்ட பொது நிலத்தை அரசு அதிகாரிகளின் உதவியோடு நில உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்துவருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒரு ஏக்கர் கொண்ட குடியிருப்பு நிலத்தில் 10 சதவிகித நிலத்தை பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என்பது அரசின் விதி முறைகளில் ஒன்று. ஆனால், பெரும்பாலான கட்டிட உரிமையாளர்களும், நில விற்பனையாளர்களும் இந்த விதியை பின்பற்றுவதில்லை. அந்த நிலத்தில் ஏதேனும் ஒரு ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி அதிலும் லாபம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்.
இதை தடுத்து நிறுத்தவேண்டிய அரசு அதிகாரிகளோ சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அல்லது ஆவணங்களை நேரில் ஆய்வு செய்யாமல் அனுமதி அளிக்கின்றனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இவை அனைத்தையும் மறைத்தே வீடுகளும், மனைகளும் விற்கப்படுகின்றன. அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்தால், இதுபோன்ற விதிமீறல்கள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படும்" என்றார்.
வாழ்க்கை முழுவதும் பல்வேறு சிரமங்களைக் கடந்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து நிம்மதியாக இருப்போம் என்ற ஆசைக்கணவோடு வீடு வாங்கும் பொதுமக்கள், இதுபோன்ற அரசு விதிகளை பின்பற்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.