கோவை மாநகரில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
அரசு பேருந்துகள்
கோவையில் அவ்வப்போது பேருந்துகள் மோதி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அரசு பேருந்து ஓட்டுனர்கள் மிக வேகமாக பேருந்தை இயக்குவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, கோவை போக்குவரத்து பணிமனை அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அதிக வேகமாக பேருந்தை இயக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து, ஓரிரு நாட்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து போலீசார்
போக்குவரத்து சிக்னல்களில் உள்ள போலீசார், போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் தேவையின்றி செல்போன் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் மாலை நேரங்களில் நான் ரோந்து சென்று வருகிறேன். அவ்வப்போது சிக்னல்களில் விதிமீறல்கள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
சிக்னலில் வெள்ளை கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறல்களை குறைப்பதன் மூலம், சாலை விபத்துக்களால் உயிரிழப்பதை தடுக்க முடியும். அடுத்தகட்டமாக, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளேன்.
இவ்வாறு கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறினார்.