கோவை மாவட்டம் சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாளர்களை கொண்டு கௌசிகா நதிக்கு செல்லும் சிறு ஓடைகளில் நீர்செரிவூட்டும் கிணறு அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கௌசிகா நதிக்கு செல்லும் சிறு ஓடைகளில் நீர்செரிவூட்டும் கிணறு அமைக்கப்பட்டுவதற்கு விஞ்ஞான ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆய்வின் அடிப்படையின் நீர் செரிவூட்டும் கிணறு மற்றும் சிறு கற்காளல் ஆன தடுப்பு ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கௌசிகா நதிக்கு நீர் வரும் சிறு ஓடைகளில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நீர் செரிவூட்டும் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல, சூலூர், அன்னூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களிலும் 600-க்கும் மேற்பட்ட நீர் செரிவூட்டும் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் நிலையில் இந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயாந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கௌசிகா நதியை வற்றாத ஜீவ நதியாக மாற்றுவதே இத்திட்டத்தின் சீரிய நோக்கமாகும்.
ஒவ்வொரு நீர் செரிவூட்டும் கிணறு 15 அடி நீளம், 6 அடி அகலம் தோண்டப்பட்டு அதனுள் 4 அடி விட்டம் கொண்ட சிமெண்ட் உறை இறக்கப்பட்டு அதை சுற்றிலும் கருங்கற்களால் நிரப்ப்படும். ஓடைகளில் மழை நீர் வரும்போது இந்த கிணற்றில் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரும். இப்பணியானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியார்களை கொண்டு செயல்படுத்தப்படும்.
இந்த செரிவூட்டும் கிணறு அமைப்பதால் வறட்சிக் காலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களைக் காத்திட பயன்படுகிறது. கால்நடைகளின் சுகாதாரமான பராமரிப்பு மற்றும் அவற்றின் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படுகிறது. மழைநீர் விரையமாகாமல் நிலத்தடி நீர் பூமிக்கும் அமைப்பாக செயல்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அருகிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது.
செரிவூட்டும் கிணறு அமைப்பதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகாமல் செரிவூட்டும் கிணறு தேக்கி வைப்பதனால் கிராம ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் செரிவூட்டும் கிணறு மனித சக்தியின் மூலமாக அமைப்பதன் மூலம் மானாவாரியில் மழையை எதிர்பார்க்காமல் பயிரை சாகுபடி செய்யலாம். மின்சார நீர் ஏற்றத்தின் மூலமாகவோ நீரை விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்யலாம். வறட்சி காலங்களில் பயிர்களுக்கு நீர் பாசனத்திற்கு பயன்படுவதால் வருடம் முழுவதும் பயிர் சாகுபடி செய்வதோடு அதிக மகசூல் பெற ஏதுவாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தெரிவித்தார்.
இப்பயணத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், சர்க்கார் சாமகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் .ஸ்ரீதர், உதவி பொறியாளர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.