கடந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசன் தமிழக அரசை விமர்சித்து வருகிறார். தொடர்ந்து அரசியலில் இறங்க போவதாகவும் கூறியுள்ள அவர், தனிக்கட்சி துவங்கவும் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் திருவனந்தபுரம் சென்ற அவர், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, டுவிட்டர் வாயிலாக தான் எப்போதோ அரசியலில் குதித்து விட்டதாகவும் கமல் அறிவித்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனை தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று(செப்.,21) சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை வந்த கெஜ்ரிவாலை, கமல் மகள் அக்ஷராஹாசன் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இதன் பின்னர், கெஜ்ரிவால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் கமலஹாசனை சந்தித்து பேசினார். இருவரது சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து செயல்பட நடிகர் கமல்ஹாசனுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருப்பார் எனத் தெரிகிறது. கெஜ்ரிவாலின் இந்த அழைப்பை கமல்ஹாசன் ஏற்பாரா, அல்லது தனது பாணியில் டுவிட்டர் அரசியலை தொடர்வாரா என்பது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நடிகர் கமலஹாசன் பேசுகையில், அர்விந்த் கெஜ்ரிவால் தன்னை வந்து சந்தித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள். மதவாதம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஒன்றிணைவதில் ஆச்சர்யமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகையில், தனிநபராகவும், நடிகராகவும் கமலஹாசன் மீது நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். மதவாதம் மற்றும் ஊழலை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன் துணிந்து தனது கருத்துகளைக் கூறி வருகிறார். கமல் அரசியலில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, அரசியல் பிரவேசம் மற்றும் ஆம்ஆத்மி கட்சியுடனான தனது நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் கமலஹசான் பதிலளிக்க மறுத்தார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து, தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாகக் கூறிய நடிகர் கமல்ஹாசனை, ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சமூக ஆர்வலருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.