கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 537 வீடுகள் காவல்துறையினர் உதவியுடன் கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று அகற்றப்பட்டன. இதில் அணைமேடு I – 71 வீடுகள், அணைமேடு II – 276 வீடுகள், துர்கா காலனியில் 7 வீடுகள், அண்ணா காலனியில் 56 வீடுகள், முத்து காலனியில் 64 வீடுகள், சேரன் நகரில் 53 வீடுகள் அகற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்களை வெள்ளலூர் பகுதியில் குடியேற்றம் செய்து இன்று (செப்டம்பர் 21) காலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை துவங்கினர்.
இரண்டாம் கட்டமாக துவங்கப்பட்டுள்ள இப்பணி தொடர்ந்து நாளையும் நடைபெறும் என்றும் இதில், வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், ஆக்கிரமிப்பு நிலங்களான நஞ்சுண்டாபுரம் இட்டேரி - 280 வீடுகள், வெள்ளலூர் ராஜவாய்க்கால் - 39 வீடுகள், ஆத்துமேடு நஞ்சுண்டாபுரம் - 66 வீடுகள், அண்ணாநகர் பீளமேடு - 219 வீடுகள், குளத்து ஏரி அண்ணன் அண்ணாநகர் - 32 வீடுகள், அண்ணாநகர் ஒண்டிபுதூர் - 66 வீடுகள், கோத்தாரி லே-அவுட் - 30 வீடுகள், ஆட்டோ டிரைவர் காலனி - 121 வீடுகள் என மொத்தம் 853 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவுள்ளனர்.
இதனிடையே, கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து அங்குள்ள மக்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கோவையில் நீர்நிலைகள் அழிந்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.