கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சுஜித் குமார் பதவியேற்றுள்ளார்.
இன்று காலை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு தேர்வு மூலமாக ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தேன். மதுரையில் பயிற்சி முடிந்த பின்னர் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது பதவி உயர்வு பெற்று இந்த பொறுப்பினை ஏற்றுள்ளேன்.
கோவை மக்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பவர்கள் என்று அறிந்தேன்.
அதே நேரத்தில் கோவை மாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 300 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தற்போது வரை 200 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்ச்சியை கொண்டு சேர்ப்பேன். அற்பணிப்புணர்வுடன் செயல்பட்டு போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகளை தடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.