சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மேலும், அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.