கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதற்காக, கோவையில் வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, பிள்ளையார்புரம், உக்கடம் கழிவுநீர்ப்பண்ணை, கீரணத்தம் போன்ற பகுதிகளில் குடிசைமாற்று வாரியத்தால் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால், அரசின் திட்டம் சற்று முடங்கியே உள்ளது.
இந்த நிலையில், கோவை வெள்ளலூரில் உள்ள ராஜவாய்க்கால், சுண்ணாம்புக் காலவாய், அணைமேடு, குறிச்சிப் பிரிவு, நஞ்சுண்டாபுரம், இட்டேரி, அண்ணா காலனி, முத்து காலனி, சேரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னாளவர்கள் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வருகையின் போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நேரிலும் மனு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தபடி, ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ளலூர் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு உத்தரவு வழங்கி, ஒருமாத கால அவகாசம் கொடுத்தும், காலி செய்யாததால் இன்று (12.09.2017) அனைத்து வீடுகளும் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்தக் வாய்க்காலானது, ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து சுமார் 6.5 கி.மீ தூரம் வரை பாய்கிறது. வெள்ளலூர் நீர்நிலைத் தொட்டி அருகே கட்டப்பட்டுள்ள மதகுகளின் மேற்புறப் பகுதி, இந்த 2 குடியிருப்புகளையும் இணைக்கும் சிறு பாதையாக மாறியுள்ளது. அதாவது, ஆக்கிரமிப்புகளால் வாய்க்காலில் இருந்து நீர் செல்லும் பாதை வெறும் 40 மீ மட்டுமே விடப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் வரும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துவிடும். இதுபோன்ற சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், கோயம்புத்தூர் மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திலுள்ள, ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம், பெரியகுளம், தெற்குகரை பகுதி நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.

அணைமேடு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவும், முத்துகாலனி, சேரன் நகர், அண்ணா காலனி, உக்கடம், பெரியகுளம், தெற்கு கரை பகுதிகளில் 3 ஏக்கர் பரப்பளவு, ஆகமொத்தம் 7 ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதாவது, முதற்கட்டமாக, 500-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, 2-வது நாளாக நாளையும் (புதன்கிழமை) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் 18 இடங்களில் மொத்தம் 1,415 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் ராஜ வாய்க்கால் அணைமேடு பகுதியில் இருந்து வெள்ளலூர் ஏரிக்கு இனி தடையின்றி மழைநீர் செல்லும் தானே? என்ற கேள்விக்கு 'ஆம்' என்று கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உண்மை நிலவரம் என்ன?
இதனிடையே, வீடுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்றாலும், முழு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகராட்சியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது, என்னவென்றால், ஆக்கிரமிப்பில் குடியிருந்து வரும் பெரும்பாலானோருக்கு, அரசால் வீட்டுமனை (பட்டா) வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, ஆக்கிரமிப்பு பகுதிகளில் வீட்டுமனை உள்ளவர்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது அறியாமல் அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர். இதனால், ராஜவாய்க்கால் பகுதியில் செய்யப்பட்டுள்ள முழு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றுவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.
"ஒரு வேளை பட்டா வைத்துள்ளவர்களை அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலவுமேயானால், அத்துணை முயற்சியும் வீணாய் போகக்கூடும்" என்றார் ஒரு தன்னார்வளர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் இணைப்பு மற்றும் சுற்றுப்புற அபிவிருத்தி பணியின் முதற்கட்டபணி மாநகராட்சி சார்பாக களத்தில் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றாலும், அது பயனற்று போகும் நிலை உருவாகியுள்ளது.