தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க., செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- ஆட்சியை கவிழ்ப்பேன் என்ற தினகரன் பேட்டிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும் போட்டி எனக்கூறி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார். தினகரனுக்கு விளம்பரம் தேடித்தர நான் தயாராக இல்லை.
பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளோம்.
ஜனநாயக அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முதலமைச்சர், பெரும்பான்மை இருப்பதாக கருதினால், தைரியம் இருந்தால் சட்டசபையை கூட்டட்டும். கொல்லைபுறமாக திமுக ஆட்சிக்கு வராது.
சட்டசபையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டசபை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரும்பான்மை நிரூபித்த பிறகு முதலமைச்சர் என்னை பற்றி பேசட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.