மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதிலிருந்து மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியும், ஜெர்மனி நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து சீர்மிகு திட்டத்தின் கீழ் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் நிறுவ தமிழக அரசு கடந்த 4.07.2017-ல் அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 11) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், கோவை மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் கோவை மாநகராட்சியின் சார்பில், ஆணையர் க.விஜயகார்த்திகேயன்-வும் ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அதன் இந்திய நாட்டின் இயக்குநர் ஆனந்தி அய்யரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஆய்வகம், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மற்ற நகரங்களை பங்குபெற செய்வதுடன் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இந்திய - ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகரத்திற்கு மேலாண்மை, முதலீட்டுத் திட்டம் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி, திறன் வளர்ப்பு திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். மேலும், திட்டங்களை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வது, திட்ட பங்குதாரர்களுக்கிடையேயான நேர்முக உரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குவது, வல்லுநர்கள் மூலம் அலுவலர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, ஸ்மார்ட் சிட்டி தொகுதிகள் மற்றும் மாநகரத்தின் விவரக்குறிப்புகளை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வது, திட்டம் மற்றும் தொழில் கூட்டுறவினை உருவாக்கி ஒருங்கிணைப்பது, உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பயிற்சி பட்டறைகளில் பங்குதாரர்கள் மற்றும் அலுவலர்களை பங்குபெற செய்வது, நீர் உட்கட்டமைப்பு, கழிவு மேலாண்மை, நகர்புற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் திட்டமிடுதல், நகர்புற ஆளுமை, போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் தூதுவர் அகிங் பேபிக், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.