கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் நேற்று (08,09,2017) மதியம் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் அப்பாவி கல்லூரி மாணவி உட்பட பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழந்தது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் வீடியோ காட்சிகளின் மூலம், இந்த கோர விபத்துக்கு இயற்கை காரணம் அல்ல, மனிதத்தவறுகளே முழுமையான காரணம் என்பது தெளிவாகியுள்ளது.
மணலாக மாறிய தனியார் கான்டிரக்ட்கள் :
தரமற்ற கட்டிடம் கட்டியதே இந்த விபத்திற்கான காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் வேளையில், இடிந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் சிலர் பத்திரிக்கையாளர்கள் முன்பு ஆய்வு செய்து காண்பித்தனர். அதில், கான்கிரீட் துண்டுகளை ஒன்றோடு ஒன்று உரசிக் காட்டினர். அப்படி உரசும்போது, கனமாக இருக்க வேண்டிய கான்க்ரீட் துண்டு உடைய கூடாது. ஆனால், மாறாக கான்க்ரீட் துண்டுகள் உடைந்து, சுக்கு நூறாகி மணல் போல் உதிர்ந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது, விபத்துக்குள்ளான கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 6 ஆண்டுகளே இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், கட்டிடத்தின் மேற்கூரையின் மீது போடப்பட்ட கான்கிரீட் உடைந்து உதிர்வது கட்டிடம் உறுதித்தன்மை இல்லாமல் கட்டப்பட்டதை உறுதிபடுத்துகிறது.
அதிகாரிகளின் ஊழல் முகம் தற்போது, பல உயிர்களை பலி வாங்கியதுடன், அவர்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
கவனத்தில் எடுக்குமா சென்னை உயர்நீதிமன்றம் :
இந்த பிரச்சனையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, தமிழக அரசு மீதும், சோமனூர் பேருந்து நிலைய கட்டிடத்தை கட்டி முடித்த ஒப்பந்ததாரர் மீதும், கட்டிடம் கட்டும் போது பதவியில் இருந்த கருமத்தம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது
அரசின் ஒப்பந்த விதிமுறைகள் இறுக்கப்படுமா..?
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் நிறுவனக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல்வேறு உயிர்களை காவு வாங்கி வந்த நிலையில். கோவையில் தற்போது அரசுக்கு சொந்தமான பேருந்து நிலையக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
எனவே, இந்தக் கட்டிட விபத்து விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என அனைவரிடத்திலும் கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியமைக்க வாக்களித்த பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு..? அல்லது 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க தொழிலதிபர்களின் ஆதரவுக்காக ஒப்பந்தங்களை அரசு தாரை வார்த்துக் கொடுக்குமா..?. இன்னும் தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு குடியிருப்புகள் தரமற்ற நிலையில் தான் உள்ளது. பார்ப்போம்.. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை...