நீட் விவகாரம் மற்றும் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும்(செப்.,7) நீடிக்கிறது.

இந்த நிலையில், கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் இன்று (செப்.,7) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.